ரஷ்யாவுடன் மீண்டும் இணைகிறது யுக்ரைய்னின் க்ரைமியா பிராந்தியம்

Image

யுக்ரைய்னில் இருந்து பிரிந்து ரஷ்யாவுடன் இணைவதற்கு ஆதரவாக க்ரைமியா பிராந்தியத்திலுள்ள 93 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர்.

ஏன்றுமில்லாத வகையில் இந்த கருத்தறியும் வாக்கெடுப்பில் மக்கள் அதிகளவில் பங்கேற்றிருந்ததாக க்ரைமியா பிராந்திய தேர்தல் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் யுக்ரைய்னின் பல எதிர்கட்சிகள் இந்த கருத்தறியும் வாக்கெடுப்பை நிராகரித்துள்ளன.
ரஷ்யாவிற்கு ஆதரவான ஜனாதிபதி விக்டர் யனூகோவிச் பதவி கவிழ்க்கப்பட்ட பின்னர் க்ரைமியா பிராந்தியத்தை ரஷ்ய ஆதரவுப் படையினர் தமது கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்திருந்தனர்.

க்ரைமியா பிராந்தியத்தில் 58 தசம் 5 வீதமானவர்கள் ரஷ்ய மொழிபேசுவோர் என்பதுடன், அவர்களில் பலர் க்ரைமியா பிராந்தியம் மீண்டும் ரஷ்யாவுடன் இணைவதற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

1 தசம் 5 மில்லியன் மக்கள் இந்த கருத்தறியும் வாக்கெடுப்பில் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருந்தனர்.

இந்த வாக்கெடுப்பு நியாயமாக நடைபெற்றதாக ரஷ்ய படையினர் க்ரைமியா பிராந்தியத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பின்னர், பிராந்திய அரசாங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட செர்ஜிஸ் அஸ்சேனோவ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை க்ரைமியாவிற்கு வெளியே டொடென்ட்ஸ் நகரிலுள்ள அரச தரப்பு சட்டத்தரணி அலுவலகத்தை ரஷ்யாவிற்கு ஆதரவான ஆர்பாட்டகாரர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

டோடென்ட்ஸ் ரஷ்யாவின் நகரம் எனவும் அவர்கள் கோஷமிட்டுள்ளனர்

ஆசிய சாம்பியனாகியது இலங்கை ….

lahiru mahela

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை ஐந்தாவது தடவையாகவும் இலங்கை அணி சுவீகரித்துள்ளது.

அத்துடன் ஆசிய கிண்ணத்தை அதிக தடவைகள் வென்ற அணி என்ற இந்தியாவின் சாதனையையும் இலங்கை அணி சமப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக 9 ஆவது வெற்றியை இலங்கை அணி பதிவுசெய்துள்ளது

மீர்பூரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுக்களால் வெற்றிகொண்டதன் மூலம் இலங்கை அணி இந்த மைல் கல்லை எட்டியது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி ஒர் கட்டத்தில் 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து இக்கட்டை எதிர்நோக்கியிருந்தது.

எனினும் நான்காவது விக்கெட்டுக்காக இணைந்த பவாட் அலாம் – அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக் ஜோடி 122 ஓட்டங்களையும், 5 ஆவது விக்கெட்டுக்காக இணைந்த உமர் அக்மல் – பவாட் அலாம் ஜோடி 115 ஓட்டங்களையும் பகிர்ந்து அணியை ஸ்திரமான நிலைக்கு இட்டுச் சென்றது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் விளையாடிய புவாட் அலாம் 114 ஓட்டங்களைப் பெற்றதுடன், மிஸ்பா உல் ஹக் 65 ஓட்டங்களையும உமர் அக்மல் 59 ஓட்டங்களையும் குவித்தனர்.

சிறப்பாக பந்துவீசிய லசித் மாலிங்க 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

261 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 1 ஆவது மற்றும் இரண்டாவது விக்கெட்டுக்கள் 56 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் அடுத்தடுத்து இழக்கப்பட்டன.

எனினும் முன்றாவது விக்கெட்டுக்காக இணைந்த லஹிரு திரிமான்ன மற்றும் மஹேல ஜயவர்தன ஜோடி 156 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்.

லஹிரு திரிமான்ன 101 ஓட்டங்களையும் மஹேல ஜயவர்தன 75 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இறுதியில் 46 தசம் இரண்டு ஒவர்களில் 5 விக்கெட்டு இழப்பிற்கு வெற்றியிலக்கை எட்டிய இலங்கை அணி ஆசியாவின் சாம்பியனாக மகுடம் சூடிக்கொண்டது.

சயீட் அஜ்மால் முன்று விக்கெட்டுக்களையும் ஜுனைட் கான் மற்றும் மொஹமட் தல்ஹா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

போட்டியின் சிறப்பாட்டகாரராக லசித் மாலிங்கவும் தொடரின் சிறப்பாட்டகாரராக லஹிரு திரிமான்னவும் தெரிவுசெய்யப்பட்டனர்.

இந்த தொடரில் இரண்டு சதங்களைப் பெற்ற லஹிரு திரிமான்ன முதல் முறையாக தொடரின் சிறப்பாட்டகாரர் விருதை வென்றெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது